? சத்தியவசனம் – இலங்கை.

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 2கொரி 12:1-10

கிருபை உனக்குப் போதும்

அதற்கு அவர்: என் கிருபை உனக்குப் போதும்.பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். 2கொரிந்தியர் 12:9

ஒரு ஊழியர் இப்படியாக தனது அனுபவத்தைக் கூறினார். அவர் பிரசங்கிக்கவேண்டிய நேரம் கிட்டவும், அவரது தொண்டை நோவெடுத்து அடைபட்டதுபோல உணரவும் சரியாயிருந்தது. கர்த்தரை நோக்கி ஜெபித்தும், எந்த மாற்றமும் இல்லை. நேரமும் வந்தது, கரகரத்த தொண்டையுடன் பிரசங்கமேடை ஏறினார். ஆனால் அவர் தன் வாயைத் திறந்து பேச ஆரம்பித்தது முதற்கொண்டு, பிரசங்கத்தை முடிக்கும் வரைக்கும் எதுவிததடங்கலும் நேரிடவில்லையாம். இறுதியாக, “என் பெலவீனத்திலே கர்த்தருடைய கிருபை என்னைத் தாங்கியதை நான் அதிகமாக உணர்ந்து அனுபவித்தேன்” என்றார் அவர்.

“கிருபை” பெறுமதிவாய்ந்ததும் வலிமைமிக்கதுமான இந்த சொல்லை மிக அலட்சியமாகவே இன்று கிறிஸ்தவர்கள் உபயோகிக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. அபாத்திரரான நமக்குக் கிடைக்கும் தேவதயவுதான் கிருபை. ஆனால், இது எங்கிருந்து எப்படி நமக்குக் கிடைக்கிறது? “எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி,..” (தீத்து 2:11). ஆக, இது புதிதானது அல்ல; ஆதியிலே இருந்தது, இயேசு கிறிஸ்துவுடன் கூடவே நமக்குள் பிரசன்னமானது. ஆதியிலே இருந்த வார்த்தை கிருபையும் சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள் வந்து வாசம் பண்ணினாரே! (யோவா.1:14) இந்தக் கிருபை நமது வாழ்வில் செய்வது என்ன? “அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி, நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்படி நமக்குப்போதிக்கிறது” (தீத்து 2:12,13). இதுதான் கிருபை. நாம் கர்த்தரைச் சார்ந்திருக்கும் போது அவருடைய கிருபை எல்லா நிலையிலும் நம்மைத் தாங்கும். இயேசுவைச் சந்திக்க நம்மை ஆயத்தப்படுத்துகின்ற தேவகிருபை, நமது பலவீனங்களில் நம்மைத் தோற்றுப்போக விடுமா? மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்ட அனுபவம் மிக்க பவுல், அதைக்குறித்து தன்னை உயர்த்தாதபடிக்கு அவருடைய மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டது என்கிறார். அவர் மூன்றுதரம் ஜெபித்தும் அது நீங்கவில்லை. அதற்காக கர்த்தர் பவுலைக் கைவிட்டாரா? அந்த நிலையில்தான் கர்த்தருடைய கிருபை அவரில் பெருகியது. “பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” என்று சொன்ன கர்த்தரின் கிருபையைவிட நமக்கென்னதான் வேண்டும்.

பலவீனம் பெருகும்போது, அங்கேதான் கர்த்தருடைய வல்லமையும் நம்மில் அதிகமாக விளங்கும். அப்போ, கர்த்தருடைய கிருபை பெருகுமானால், என் பலவீனம் அப்படியே இருக்கட்டும் என்று நம்மால் நம்மை ஒப்புக்கொடுக்கமுடியுமா?

? இன்றைய சிந்தனைக்கு:      

எத்தனைதரம் ஜெபித்தும் பலன் இல்லை என்று சோர்ந்து விட்டோமா? சற்று கர்த்தரையே சார்ந்து அவர் கிருபையை உணருவோம்!

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin