? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : பிலிப்பியர் 4:4-9

உள்வாங்கும் சிந்தனைகள்

கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்க முள்ளவைகளெவைகளோ, …அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள். பிலிப்பியர் 4:8

இன்று உலகமே வலைத்தளத்தின் பிடியில் சிக்கியிருக்கிறது. எதைக்குறித்து அறிய வேண்டுமென்றாலும், உடனடியாகவே விபரங்கள் கிடைக்கும். ஆனால், வலைத்தள விபரங்களை நமக்குத் தருகின்ற கணனியோ அல்லது தொலைபேசியோ வெறும் இயந்திரம்தான். துண்டுதுண்டாக இருக்கும் பகுதிகளை ஒன்றிணைத்து ஒரு கணனி யைப் பூர்த்தி செய்யும்போது, அதற்குள் எதுவித தகவலும் கிடையாது. பின்னர், எதையெல்லாம் நாம் அதற்குள் புகுத்துகின்றோமோ, அவற்றைத்தான் அது திரும்ப நமக்குத் தருகிறது. நமக்கு விருப்பமான ஒரு பாடலைக் கேட்பதற்கும், நாமேதான் அப்பாடலை அதனுள் புகுத்தவேண்டும். அல்லது, அதற்கேற்ற தொடர்பை ஏற்படுத்த வேண்டும். மொத்தத்தில் நாம் எதனை உட்செலுத்துகிறோமோ, அல்லது, என்ன தொடர்பை ஏற்படுத்துகிறோமோ அதுவே நமக்குத் திரும்பக் கிடைக்கிறது. இப்படித் தான் நமது மனதும், அதன் சிந்தனையும்.

சிறையிலிருக்கும் ஒருவரது சிந்தனையில் என்ன தோன்றும்? மனதில் சந்தோஷம் வருமா? வெறுப்பு, வேதனை, விடுதலையின் ஏக்கம், தனது இந்த நிலைமைக்குக் காரணமானவர்கள் மீதான ஆத்திரம் என்று பலவித உணர்வுகள் அவரைத் தாக்கும்; அது இயல்பு. ஆனால், பவுலடியாரோ, ரோம சிறைச்சாலையில் இருந்தபடி பிலிப்பிய சபைக்கு எழுதிய கடிதம் மிகவும் வித்தியாசமானது. அவரின் மனது அவர் எழுதிய கடிதத்தில் வெளிப்படுகிறது. அவருடைய உள்ளான மகிழ்ச்சியை வெளியிலுள்ள சிறையினால் சிறைப்படுத்த முடியவில்லை. தன் மனதை அவர் எவற்றுக்கெல்லாம் நேராக்கி வைத்திருந்தாரோ, அவற்றையே அவர் நமக்கும் எழுதியுள்ளார். சூழ்நிலை எதுவாக இருந்தாலும்கூட உண்மை, ஒழுக்கம், நீதி, கற்பு, அன்பு, நற்கீர்த்தி, புண்ணியம், புகழ் இவற்றைக்குறித்த எண்ணங்களால் எம் மனதை நிரப்பும்போது, நமது சிந்தனைகளும் அவற்றுக்கேற்ப தூய்மையானதாகவே இருக்கும். நமது சிந்தனைகள் தூய்மையானால் வாழ்வும் மகிழ்ச்சியாயிருக்கும்.

பலவிதமான உள்மனப் போராட்டங்கள் பலருக்குண்டு. அழுக்கான சிந்தனைகளால், கற்பனைகளால் அலைக்கழிக்கப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். நாம் எதனை உள்வாங்குகிறோம், எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைக் கவனிப்பது நல்லது. புத்தகம், தொலைக்காட்சி, இணையதளம் என்றும், யாரோடு பேசுகிறோம் என்பதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நாம் ஆண்டவருடைய பிள்ளைகள் தான். ஆனால், நமது மனதை எதனால் நிரப்புகிறோம் என்பதுவே கேள்வி. சுத்தமான விடயங்களால், தேவ வார்த்தைகளால் நம்மை நிரப்புவோமாக. அப்போது நமது சிந்தனை சுத்தமாகும்; நாமும் மகிழ்ச்சியாக வாழலாம்.

? இன்றைய சிந்தனைக்கு:  

இன்று என் மனதை நிரப்பியிருப்பவை எவை? உள்மனப் போராட்ட பாரங்களை இப்போதே தேவ பாதத்தில் வைத்துவிடுவேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin