? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 92:1-5

நன்றியுள்ள உள்ளம்

கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவதும்…நலமாயிருக்கும். சங்கீதம் 92:1,3

வருடத்தின் பாதிக்குள் கடந்துவந்துவிட்டோம். இந்த இடத்தில் நின்று நாம் தேவனைத் துதிப்போமா? அல்லது பாரமான இதயத்தோடு மௌனம் சாதிப்போமா? வாழ்வில் மிகவும் இலகுவான விடயம், குறைகள் கூறுவதும், குறைவுகளைக் குறித்துப் பேசுவதும் தான். ஆனால், உள்ளத்தின் ஆழத்திலிருந்து தேவனைத் துதிப்பதற்கோ நாம் காரணங்களைத் தேடி அலைவோம். இன்று, துதியும் ஸ்தோத்திரமும் நுனி நாக்கில் இருக்கிறது. தேவனைத் துதிப்போம் என்றதுமே, ‘துதிக்கிறோம் துதிக்கிறோம்’ என்று சத்தமிட நாம் பழக்கப்பட்டுவிட்டோம். ஆனால், அந்தத் துதியும் ஸ்தோத்திரமும் உண்மையாகவே முழு உணர்வோடு ஏறெடுக்கப்படுகிறதா என்பதே கேள்வி.

இஸ்ரவேலில் ஓய்வுநாளின் ஆராதனைகளிலே பாடப்பட்ட ஒரு சங்கீதம்தான் இந்த 92ம் சங்கீதம். ஓய்வுநாளிலே, ஆராதனைகளில் தேவன் அருளிய ஆசிகளையும், அவர் செய்த ஒவ்வொரு நன்மைகளையும் நினைத்து நன்றிசொல்வது அவசியமே. ஆனால், ஓய்வுநாளோடு, ஆராதனை வேளையோடு அது நின்றுவிடக்கூடாது. நமது உள்ளம் எந்நேரமும் நன்றியால் நிரம்பியிருக்கவேண்டும். உள்ளம் நிரம்பியிருந்தால் உதடுகள் தானாய் நிரம்பும். நமது பெற்றோர் நண்பர்கள் தலைவர்கள் என்று நம்மைச் சுற்றியிருக்கிறவர்களுக்கு நாம் நன்றி சொல்லுவதே மிகவும் குறைவு. குறைகளைக் கண்டுபிடித்து முறுமுறுக்கின்ற நமக்கு, நன்றிசொல்லக் காரணங்களா தெரியாது? காலையிலே கர்த்தருடைய கிருபையையும், இரவிலே அவரது உண்மைத்துவத்தையும் நினைத்துப் பார்த்தாலே துதியும் ஸ்தோத்திரமும் தானாய் எழும்பும். தேவனைத் துதிக்கும் துதியினால் நிரம்பும்போது, சுற்றிலுமுள்ள அவருடைய சிருஷ்டிகளுக்காக நன்றி சொல்லாமல் இருக்கமுடியாது. அதைத் தொடர்ந்து, நம்மைச் சுற்றியுள்ள மனிதருக்காகவும், மனிதருக்கும் நன்றிசொல்லத் தயங்கமாட்டோம். ஆனால் இந்தத் துதியும் ஸ்தோத்திரமும் உண்மையிலேயே நமது உள்ளங்களின் ஆழங்களிலிருந்து எழும்புகிறதா? நாம் கடமைக்கு நன்றி சொல்லுகிறோமா, அல்லது நிறைந்த மனதுடன் சொல்லுகிறோமா என்பதைத் தேவன் அறிவார்.

சின்னச்சின்ன விடயங்களுக்கெல்லாம் நன்றியை எதிர்பார்க்கிறவர்கள் அநேகருண்டு. அப்படியிருக்கும்போது நமது துதியிலும் ஸ்தோத்திரத்திலும் தேவன் மகிழாமல் இருப்பாரா! தேவனின் மகத்துவங்களை நினைத்துப் பார்ப்போம். அப்போது, நமது உள்ளம் தானாகவே நன்றியால் நிரம்பும். நாம் தேவனுக்கும், மனிதருக்கும் நன்றிசொல்லுவோம். அப்போது நமது வாழ்வைக்குறித்த நமது மனநோக்கு நிச்சயம் மாறிவிடும். நன்றி யுள்ள உள்ளமானது கருணை, அன்பு, தாழ்மை, எப்பொழுதும் எதனையும் சாத்தியமாகக் காணும் கண்ணோட்டம் யாவும் நிரம்பிய ஒருவராக நம்மை மாற்றிப்போடும்.

? இன்றைய சிந்தனைக்கு:

நன்றிசொல்ல எனக்கிருக்கும் தயக்கம் என்ன? இன்று நான் யாருக்கு எதற்கு நன்றி சொல்லப்போகிறேன்.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin