? சத்தியவசனம் – இலங்கை. ??


? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 27:1-14

? கர்த்தருக்கே காத்திரு!

நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.  சங்கீதம் 27:13

‘கெட்டுப்போயிருப்பேன்” என்று கூறுவதால், தாவீதுக்கு ஏற்பட்ட சோதனை எத்தனை பலமாயிருந்திருக்கும் என்பதை ஊகிக்கலாம். நமக்கு வரும் சகல துன்பங்களும் நாம் கெட்டுப் போகுமளவிற்கு நம்மைத் தாக்கக்கூடும். ஆற்றமுடியாத துக்கங்கள். மரண பயங்கள், அருமையானவர்களை இழந்துவிட்ட அனுபவங்கள் இப்படியான வேளைகளிலேதான் நமது உள்ளம் உடைந்து நொருங்கி ஆத்துமா இளைத்து களைத்துப் போகிறோம். யாருடைய ஆறுதலும் அவ்வேளைகளில் நமக்குப் பலன் அளிக்காதது போலிருக்கும். உலகத்துத் துன்பங்கள் யாவும் ஒன்றுகூடி நம்மை நசுக்கி விட்டதுபோலத் தோன்றும்.

ஒருசமயம் தாங்கமுடியாத வியாதியினால் தாக்குண்டு பலமிழந்து இருந்தேன். அப்போதெல்லாம் அடிக்கடி என்னைப் பராமரிப்பவரின் மார்பிலே நான் சாய்ந்துவிடுவதுண்டு. அந்தவேளைகள்தான் என் ஆத்தும நேசரின் மார்பிலே சாய்ந்து நிற்கும் உன்னத அனுபவங்களை தந்தது. ஆம். கர்த்தர் ஜீவனுள்ளோர் தேசத்திலே நமக்கு நம்பிக்கையை வைத்துள்ளார். தமது பிள்ளைகள் மூலமாக நம்மைத் தாங்கிக்கொள்வார். தேவன் தரும் நன்மையும் கிருபையும் நம்மைத் தொடர்ந்து வரும். இம்மையிலே இந்த நம்பிக்கை இல்லாவிட்டால் கஷ்டங்கள் நெருங்கும்போது நாம் நொருங்கிப்போவோம். மறுமையில் ஜீவனுள்ள தேவனுடைய சந்நிதானத்திலே நாம் ஜீவனுள்ளோருடன் ஜீவனுள்ளவர்களாய் ஜீவித்திருப்போம் என்ற நம்பிக்கையைத் தேவன் தந்திருப்பதால் நாம் மரணத்திற்குப் பயப்படோம்.

இந்த ஆசீர்வாதங்களை நாம் சுதந்தரித்துக்கொள்ள வேண்டுமாயின் ஒன்று செய்ய வேண்டும். கர்த்தருக்குக் காத்திருக்க வேண்டும். ‘கர்த்தருடைய நன்மையைக் காண்பேன்” என்று திட்டமாக நம்பவேண்டும். அவரது மார்பிலே முற்றுமாகச் சாய்ந்துவிடவேண்டும். போலி நம்பிக்கை நமக்குப் பயன்தராது. ஹட்சன் டெய்லர் என்ற வல்லமையான சுவிசேஷகர். தமது கடைசிக்காலத்திலே. ‘நான் அதிக பெலவீனமாயிருக்கிறேன்; என்னால் எழுதமுடியாது; வேதம் வாசிக்கமுடியாது; ஜெபிக்கவும் முடியாமல் இருக்கிறது. ஆனால் நான் ஒரு சிறு குழந்தையைப்போல கர்த்தரையே நம்பி அவர் கரங்களில் அமைதியாகப் படுத்திருக்கிறேன்” என்று எழுதிவைத்தாராம். அவரைப்போல கர்த்தரிடத்தில் நன்மையை – நன்மையையே காண்பேன் என்ற நம்பிக்கை உன்னிடமுண்டா? அந்த நம்பிக்கை ஒன்றே நம்மைப் பெலப்படுத்தட்டும். தேவபிள்ளையே நீ கெட்டுப்போவதற்குக் கர்த்தர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். கர்த்தரை நம்பி அவருடைய மார்பிலே இளைப்பாறு. அவர் உன்னைப் பராமரிப்பார்.

? இன்றைய சிந்தனைக்கு:

நான் கெட்டுப்போகாதபடிக்கு ‘ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தரின் நன்மையைக் காண்பேன்” என விசுவாச முழக்கமிடுவேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Solverwp- WordPress Theme and Plugin