📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எரேமியா 18:1-11

களிமண் பாத்திரம்

இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல, நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள். எரேமியா 18:6

“மனிதனே! நீ மண்ணாக இருக்கின்றாய்; மண்ணுக்குத் திரும்புவாய்” என்ற ஒரு அருமையான கிறிஸ்தவ பாடல் உண்டு. ஆம், நாம் மண்ணினாலே உருவாக்கப்பட்டவர்களே. “தேவனாகிய கர்த்தர் மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். மனுஷன் ஜீவாத்துமாவானான்” (ஆதி.2:7) என்று வேதம் சொல்லுகிறது. அந்தப்படி இந்த உலக வாழ்வு முடிந்தபின், தேவன் நமக்குள் ஊதி நமக்கு அருளிய அழியாத ஆத்துமா, நித்திய ஜீவனுக்குச் செல்லும்; அல்லது, நித்திய நரகத்திற்குச் செல்லும். ஆனால், மண்ணினாலான சரீரமோ மீண்டும் மண்ணிற்கே திரும்பும். அழிவிற்குரிய இந்த சரீரத்தை கவர்ச்சியாக வைத்துக்கொள்ள, சரீரஉணர்ச்சிகளைத் திருப்திப்படுத்த நாம் எவ்வளவாய்ப் பாடுபடுகிறோம். மண்ணுக்குத் திரும்பும் இச் சரீரத்துக்குக் காட்டும் அக்கறையை நாம் நமது அழியாத ஆத்துமாவுக்குக் காண்பிக்கிறோமா?

தமக்கென்று தாமே தெரிந்துகொண்ட இஸ்ரவேல், கர்த்தருடைய நெறிமுறைகளை யும், அவரையும் விட்டு விலகியது. அதற்காகக் கர்த்தர் அவர்களை அழித்துவிட்டு, வேறொரு இனத்தைத் தெரிந்துகொள்ளவில்லை. தமது மக்களை உடைந்து நொருக்கி உருவாக்குகின்ற சங்கதிகளை பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களில் வாசிக்கிறோம். இந்த தேவன் தமது பிள்ளைகள் நம்மைக் கைவிடுவாரா? ஆனால், நாமேதான் நம்மைகளிமண்ணாக தேவகரத்தில் கொடுக்கவேண்டுமே! ஆம், நமது வாழ்வை ஆண்டவருக்கென்று அர்ப்பணித்து அவர் அருளும் மீட்பை பெற்றுக்கொள்வோமானால், குயவன் கையிலுள்ள களிமண்போல, அவர் கரங்களிலுள்ள கணிமண்ணாக மாறுகிறோம். ஒரு குயவன் கையிலுள்ள களிமண்ணிலிருந்து, தன் மனதிற்கு இசைந்த பாத்திரம் ஒன்றை வனைவதற்காக அவன் அதைச் சுத்தம் செய்து, பதப்படுத்தவேண்டும். சுத்தப்படுத்தப்படாத பதப்படுத்தப்படாத களிமண்ணால், சரியான பாத்திரத்தைச் சரியாக வனைய முடியாது. மேலும், தன் மனவிருப்பப்படி அது அமையாவிட்டால், அதை உடைத்து, மறுபடியும் பிசைந்து, தன் மனவிருப்பத்தில் உள்ளபடி மீண்டும் வனையவும் அவனுக்கு உரிமையுண்டு. ஏனெனில், அக் களிமண் அவனுக்குரியது.

ஒருவேளை குயவன், இந்தக் களிமண்ணால் பயனில்லை என்று எறிந்துவிட்டாலும், களிமண்ணாய் கர்த்தரின் கரத்தில் இருக்கிற நம்மை அவர் ஒருபோதும் எறிந்துவிடவேமாட்டார். தமது மனதுக்கு இசைந்த பாத்திரமாக உருவாக்குவதற்குத் தடையாயிருக் கிற மறைந்துள்ள, கடினப்பட்ட பகுதிகளை நிச்சயம் அவர் பிடுங்கி அகற்றுவார். அப்போது வலியும் வேதனையும் ஏற்படலாம். ஆனாலும் நாம் அவருடைய கரத்தில் இருக்கிறோம் என்ற திடநம்பிக்கையோடு அவருடைய உருவாக்கலுக்கு நம்மை அர்ப்பணிக்கலாம்; அர்ப்பணிப்போமா!

💫 இன்றைய சிந்தனைக்கு:  

குயவனே உம் கையில் களிமண் நான், உடைத்து உருவாக்கும், என் சித்தமல்ல உம் சித்தம் நாதா, தருகிறேன் உம் கரத்தில்.

📘 அனுதினமும் தேவனுடன்.

One thought on “ஒக்டோபர் 24 திங்கள்”
  1. When I read an article on this topic, safetoto the first thought was profound and difficult, and I wondered if others could understand.. My site has a discussion board for articles and photos similar to this topic. Could you please visit me when you have time to discuss this topic?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin