? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எபேசியர் 4:30-32

கசப்புகள் கரையட்டும்

இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்… நீதிமொழிகள் 14:10

சுயமான கருத்துக்கள், அதனாலுண்டாகும் கசப்புகள் என்று பலவற்றை இருதயத்திலே புதைத்துவிட்டு, வெளிவாழ்விலே எவ்வளவாக நாம் நடித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை நம்மால் மெய்மனதுடன் ஏற்றுக்கொள்ளமுடியுமா? ஆனால், தேவன் நமது இருதயத்தை அறிவார், புதைந்து கிடக்கின்றவற்றை ஒருநாள் வெளிப்படுத்துவார் என்பது நிச்சயம். ஆனால், அவர் வெளிப்படுத்தி நாம் வெட்கப்பட்டுப்போக முன்னதாக, ‘தேவனே, என்னை உணர்வடையச்செய்து, என் இருதயத்தைச் சுத்திகரியும்’ என்று ஜெபிப்பது சிறந்தது. ஜெபத்தைக் கேட்கும் தேவன் நம்மைத் தகுந்த சூழ்நிலைகளுக் கூடாக நடத்தி, கசப்புகளை உணரவைத்து, சுத்திகரித்து, பெரிய விடுதலையைத் தருவார். இந்தச் சுத்திகரிப்பைத் தேவனே செய்யவேண்டும். இது நம்மால் முடியாது.

ஆலயம் ஒன்றிலே, ஆராதனையை முடித்துவிட்டு வெளியேறியபோது, ஒருவர் அங்கு இருந்த பூக்களையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார். ஆலயத்திலே வைத்த பூவைத் திருப்பி எடுப்பதா என்று ஒரு சிலருக்கு மனவருத்தம். இது அந்த நபரின் இருதயத்தை உடைத்தது. இருதயத்தில் குத்துண்ட அவர்: ‘பூக்களைத் திருப்பி எடுத்தபோது, மனதிலே ஒரு தயக்கம் உண்டானது உண்மை. அதையும் மீறி, எடுத்துவிட்டேன். இப்போது, குற்றவாளியாகக் காணப்பட்ட நான், ஏன்தான் எடுத்தேன் என்று மனஸ்தாபப்பட்டு தேவ சமுகத்தில் மண்டியிட்டு அழுதேன். அப்போது, ஆச்சரியவிதமாக, எனக்குள்ளே புதைந்திருந்த ஒரு கசப்புணர்வை தேவன் உணர்த்தினார். ‘உனக்குள் கசப்பு இல்லையானால் இந்தப் பூக்களை எடுத்திருப்பாயா? உன் மனதின் கசப்பை எடுத்துப்போடு’ என்பதாக உள்ளத்திலே குத்தப்பட்டேன். உண்மையாகவே மனங்கசந்து அழுதேன். ‘என்னை யும் மீறி எனக்குள் புதைந்துகிடந்த கசப்பை உணர்ந்தேன். அது நீங்கப்பெற்று, பெரிய தொரு விடுதலை கிடைத்ததையும் உணர்ந்தேன்’ என்றார் அவர்.

இது ஒரு சிறிய சம்பவம்தான். இந்த நபருக்கு அங்கிருந்த ஏதோ ஒன்றின்மீது அத்தனை கசப்பு. அது சரியானதே என்பதே அவரது உள்ளுணர்வு. அந்தக் கசப்பை அந்தப் பூக்களினூடாக வெளிப்படுத்திவிட்டார். அந்தப் பூக்களால் ஆலய அலங்காரத்தைச் செய்ததும் அவர்தான். ஆனால் பூக்களை அங்கே விட்டுவிட்டு வர கசப்புணர்வு இடமளிக்கவில்லை. இதனால் யாருக்கு என்ன லாபம்? கசப்பு மாறியதா? இல்லை, அது மேலும் வெறுப்பாக மாறியதுதான் மிச்சம். பூக்களிலும்பார்க்க, இதய அழகையே தேவன் விரும்புகிறார். ஆம், இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும். அதனை உணராமலேயே நாம் நியாயம் பேசுவோம். கசப்புணர்வு பெரிய அழிவுக்கு வழிகோலும். இரக்கமுள்ள தேவன், நாளைக்கு வாடிக் கருகிப்போகும் கொத்துப் பூக்களைக்கொண்டு ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி, இருதயத்தில் புதைந்துகிடந்த அர்த்தமற்ற மனக்கசப்பைப் பிடுங்கி எறிந்தே போட்டார்.

? இன்றைய சிந்தனைக்கு:

நமது இருதயத்திற்குள் புதைந்திருக்கும் மனக்கசப்புக்களை தேவன் அறிவார். அவற்றைச் சுத்திகரித்து நமது இருதயத்தை அழகாக்கும்படி ஜெபிப்போமா!

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin