? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: நீதிமொழிகள் 4:20-27

இருதய காவல்

எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக் கொள். அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும். நீதிமொழிகள் 4:23

‘அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்’ (நீதி.23:7). தேவனைத் துதிக்கும் துதியும் ஸ்தோத்திரமும் இருதயத்தின் ஆழத்திலிருந்து புறப்பட வேண்டும் என்பது நாம் நன்கு அறிந்திருக்கிற விடயம். ஆனால் அதேசமயம், அதே இருதயத்திலிருந்து எழும் சிந்தனைகள் நம்மையும் தேவனையும் பிரித்துப்போடும் அளவுக்கு சக்தி வாய்ந்தவை என்பதைக்குறித்தும் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். சிந்தனைகள் இருதயத்தில்தான் தோன்றுகின்றன. பின்னர் அவை மூளைக்கு அனுப்பப்பட்டு, உருவெடுத்து, பின்னரே செயற்பாடாக வெளிப்படுகிறது. ‘உன்னைக் குறித்து நீ யாரென்று நினைக்கிறாயோ, நீ அவனல்ல,உன்னுடைய நினைவு எப்படி இருக்கிறதோ அவ்வாறே நீ இருக்கிறாய்’ என்பார்கள். இது எத்தனை உண்மை!

ஞானத்திலும் அறிவிலும் ஆற்றலிலும் செல்வத்திலும்கூட சிறந்து விளங்கிய சாலொமோன் ராஜா, வாழ்வில் எல்லாமே மாயை என்று அலுத்துக்கொண்டார், இது ஏன்? அவர் தனது வாழ்வில் எவ்வளவாய் குழம்பித் தவித்திருக்கவேண்டும்! இறுதியில் அவருக்கு ஏற்பட்ட வீழ்ச்சியும் நமக்குத் தெரியும். இத்தனைக்கும் காரணம் இருதயத்தின் சிந்தனைகள்தான். ‘எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள்’ நாம் எதை விரும்புகிறோமோ, அதை முடிக்கவேண்டுமென்று, நேரத்தையும், வழிகளையும் எப்படியோ கண்டுபிடித்து, அதைச் செய்தும் விடுகிறோம். ஆம், அன்பும் ஆசைகளும் ஊற்றெடுக்கும் நமது இருதயமே நமது வாழ்வுமுறையை நிர்ணயிக்கிறது. உண்மையில், தேவனுக்குப் பயந்து வாழுவதே மனிதனுக்குச் சிறந்தது.

இந்த விழுந்துபோன உலகில் வாழும்வரைக்கும் நமக்குள் நமது மாம்சத்துக்கும் ஆவிக்கும் ஒரு போராட்டம் நிகழத்தான் செய்யும். எவ்வளவுதான் முயற்சித்தாலும் சிந்தனைகள் அலைபாயத்தான் செய்யும். ஆகவே, இருதய சிந்தனைகளை நாம் கட்டுப்படுத்தவேண்டியது மிக முக்கியம். தேவனுக்குப் பிரியமான வழியில் வாழ்வதைக் குறித்த சிந்தனை நம் இருதயத்தை நிரப்பினால், அங்கிருந்து ஊற்றெடுக்கும் ஊற்று அநேகருக்கு ஆரோக்கியம் தரும். வாயில் வருவதையெல்லாம் பேசாதபடி, கண் காண்கிற எல்லாவற்றுக்கும் பின்னே செல்லாதபடி முதலில் நமது இருதயத்திற்கு நாமே தான் காவல் வைக்கவேண்டும். அன்புசெலுத்துவதிலும் அவதானம்வேண்டும், நம்மைக் கவரும் காரியங்களிலும் கவனம் வேண்டும். வலதுபுறம் இடதுபுறம் சாயாமல் நமது இருதயத்தைக் காத்துக்கொள்ள வேண்டும். இன்று நமக்குப் பரிசுத்த ஆவியானவர் துணை நிற்கிறார். அவருடைய பெலத்தை நாடி, நல்ல ஊற்றுக் கண்களாக வாழ நம்மை ஒப்புவிப்போமாக.

? இன்றைய சிந்தனைக்கு:

தேவனுக்குப் பிரியமில்லை என்று தெரிந்திருந்தும் என் இருதயத்தை அலைமோதச் செய்கின்ற காரியங்களை அடையாளங்கண்டு தேவனிடம் அவற்றை அறிக்கை செய்வேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin