? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2நாளாகமம் 20:1-13

?  உறுதிப்படுத்தும் வார்த்தை

எங்களுக்குப் பெலனில்லை. …ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது 2நாளாகமம் 20:12

தேவனைவிட்டு விலகி, வேறு வழி நாடும் சோதனைக்கு பல சந்தர்ப்பங்களில் நாம் முகங்கொடுக்க நேரிடுகின்றது. அவற்றை இரண்டு முக்கிய குறிப்புகளுக்குள்  அடக்க முடியும். ஒன்று, சுகபெலமாய் குறைவின்றி வாழும்போதும் நாம் சோதனைக்குட்படுகிறோம். அடுத்தது, எல்லாக் கதவுகளும் அடைபட்டு, நெருக்கப்படும்போதும் நாம் சோதிக்கப்படுகிறோம். எந்தவகை சோதனைக்குள் இன்று நாம் அகப்பட்டிருக்கிறோம்?

யோசபாத்தும் மிகுந்த ஐசுவரியமும் கனமும் வந்தபோது, அவன் விழுந்தான்; வழி விலகினான். ஆனாலும், கர்த்தர் அவனை நினைவுகூர்ந்து அவனைத் தப்புவித்தார். இப்போது, பெரிய நெருக்கம் உண்டானது. பெரியதொரு படை யூதாவுக்கு எதிராக வருவதாகத் தகவல். யோசபாத், யாருடைய உதவியையும் நாடவில்லை. அத்துடன் யூதா ஜனங்களும் கர்த்தரிடத்திலே சகாயந்தேடக் கூடினார்கள். கர்த்தரும் அவர்களுடைய விண்ணப்பதைக் கேட்டார். அவர்கள் கர்த்தரைப் பாடித் துதிசெய்ய தொடங்கியபோது யூதாவுக்கு விரோதமாகப் பதிவிருந்தவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள் (2நாளா. 20:20-24). யோசபாத் மாத்திரமல்ல, இந்நெருக்கத்திலே மக்களும் ஒன்றுகூடி தேவனை தேடினார்கள். இது எப்படி நடந்தது? ‘இவர்கள் யூதாவிலே உபதேசித்து, கர்த்தருடைய வேத புஸ்தகத்தை வைத்துக்கொண்டு, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் திரிந்து ஜனங்களுக்குப் போதித்தார்கள்” (2நாளாகமம் 17:9).

பழைய ஏற்பாட்டு சம்பவங்கள்போல இன்று நாம் ஒரு அக்கினி ஸ்தம்பத்தையோ, மேக ஸ்தம்பத்தையோ கண்டதில்லை; அவர் சத்தத்தைக் கூடக் கேட்டதில்லை. உலகிலே இயேசு வாழ்ந்த காலத்தில் நாம் இருந்ததில்லை. ஆனாலும், இன்று நமது இருதயம் தேவனை நம்புகிறதே, எப்படி? இதுதான் தேவகிருபை. அவரை விசுவாசிக்கின்ற விசுவாசத்தை அவரே நமது இருதயத்தில் கிருபையாய் கொடுத்திருக்கிறார். இந்த விசுவாசத்திலே நாம் உறுதியாய் நிற்கிறோம் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவருடைய பரிசுத்த வேதாகமம். அது நமக்குத் தேவனை வெளிப்படுத்துகிறது; அவருடைய வல்லமையை உணர்த்துகிறது. அவருடைய வேதமே நமக்கு ஜீவனாயிருக்கிறது. அது ஒருபோதும் மாறாது. மாறாத வார்த்தையைக் கொண்டிருக்கிற நாம் சூழ்நிலைகள் சாதமாகவோ பாதகமாகவோ எப்படி மாறினாலென்ன, தேவனைவிட்டு அகலுகின்ற சோதனைக்கு மாத்திரம் இடமளிக்காதிருப்போம். நாம் சோதனைக்குட்பட்ட சந்தர்ப்பங்களை நினைத்துப் பார்த்து, இனியும் அது என் வாழ்வில் நேராதபடிக்கு தேவனுடைய வார்த்தையை இறுகப் பற்றிக்கொள்வோமாக. எல்லா நிலைமையிலும் அவரே நம்மோடிருக்கிறவர். ‘என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்கக்கடவது.” நீதிமொழிகள் 23:26

? இன்றைய சிந்தனைக்கு:

நான் தேவ வார்த்தையை இறுகப் பற்றிக்கொள்கிறேனா?

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Solverwp- WordPress Theme and Plugin