? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எரேமியா 29:10-14

முழு இருதயத்தோடு தேடினால்…

உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால் என்னைத் தேடுகையில்  கண்டுபிடிப்பீர்கள்!  எரேமியா 29:13

நம்பமுடியாத காரியங்களைக் கூறி, அவற்றைத் தேடி நாடவேண்டும் என்று தேவன் நம்மிடம் எதிர்ப்பார்ப்பதில்லை. அவருடைய வார்த்தை சத்தியம். அந்த வார்த்தையின்படி உண்மையாய் நடப்போமானால் அதன் மேன்மையான முடிவை நிச்சயம் கண்டடைவோம். நமது எதிர்காலத்தையும் முடிவையும்கூட அறிந்தவர் நம் தேவன். அவரே நமக்கான திட்டங்களை வகுத்து அந்த வழியிலே நம்மை நடத்திச்செல்கிறார். அந்தப் பாதையில் ஆபத்து இல்லை, கஷ்ட துன்பம் இல்லை என்று சொல்லமுடியாது. எது இருந்தாலும் முடிவு மகா மேன்மையுள்ளதாயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதைக் கண்டடைய முழு இருதயத்துடன் கர்த்தரை நாமேதான் தேடவேண்டும்.

கர்த்தருக்குக் கீழ்ப்படியாததால், யூதா, பாபிலோனியரால் சிறைப்பிடிக்கப்பட தேவன் தாமே அனுமதித்திருந்தார். அப்படியே சிறைப்பிடிக்கப்பட்டுச் சென்றபோதும், தேவன் அவர்களை மறக்கவில்லை. அவர்களுக்கு ஒரு புதிய ஆரம்பத்தை, ஒரு புதிய நோக்குடன் வாழும் ஒரு புதிய வாழ்வைத் தர ஆயத்தமாயிருந்தார். ஆனால் அவர்கள் விண்ணப்பம் பண்ணவேண்டும். அப்படிச் செய்தால்தான், தேவன் அவர்களுக்குச் செவிக்கொடுப்பார். கஷ்ட துன்பவேளையில் தேவன் நம்மைக் கைவிட்டு விட்டாரோ என்று நாம் எண்ணலாம். ஆனால், யூதாவில் அவர் கொண்டிருந்த எண்ணத்தையே அவர் நம்மிலும் கொண்டிருக்கிறார். ஆகவே நாம்தான் அவரைத் தேடவேண்டும். அவரிடத்தில் தஞ்சமடைகிறவர்கள் பாக்கியவான்கள்.

கர்த்தருடைய பிள்ளைகள் முழு நம்பிக்கையுள்ள எதிர்காலத்தைப் பெற்றுக் கொள்வதே அவருடைய அநாதி சித்தம். வாழ்வின் கஷ்டநிலைகளில் மாத்திரமல்ல, அகதிகளாக்கப்பட்ட அல்லது சிறைப்பிடிக்கப்பட்ட நிலையிலும் தேவபிள்ளைகள் மனம்நொந்து போகக்கூடாது. ஏனெனில், தேவன் நம்மோடே இருக்கிறார். எந்தவேளையும் அவரை நோக்கிக் கூப்பிடுகிற சுதந்திரத்தை அவர் நமக்குத் தந்திருக்கிறார். அவருடைய கிருபை நமக்கு எப்போதும் உண்டு என்ற நிச்சயத்தைத் தந்திருக்கிறார். எந்த சூழ்நிலையிலும், அது ஒரு புது இடமோ, சத்துருக்களின் நடுவிலோ, வியாதியோ, மரண ஆபத்தோ, எதுவானாலும் அவர் நம்மோடு இருக்கிறார். ஆனால் நாம் அவரைத் தேடவேண்டும். 

முழு இருதயத்தோடு கர்த்தரைத் தேடினால் வார்த்தைக்கூடாகவோ, தமது சிருஷ்டிகளுக்கூடாகவோ, அல்லது எந்த விதத்திலோ தாம் நம்மோடு இருக்கும் நிச்சயத்தைத் தேவன் நிச்சயம் தருவார் என்பதே நாம் அவரைப்பற்றிக் கொண்டிருக்கிற நிச்சயம். தேவனை நீங்கள் தேடுவீர்களானால் அவர் உங்களுக்குப் பதிலளிப்பார். பின்னர் அவரைத் தேட ஏன் தாமதம்?

சிந்தனைக்கு:

முழு உள்ளத்தோடு தேவனைத் தேடுவது என்பதை நான் எந்தளவுக்குப் புரிந்துவைத்திருக்கிறேன். அந்த அனுபவம் உண்டா?

?♂️ எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532


? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin