? சத்தியவசனம் – இலங்கை. ??



? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: தானியேல் 6:10-14

ஜனங்களுக்குப் பயந்ததினால்

அவர்கள் அத்தேசத்தின் ஜனங்களுக்குப் பயந்ததினால்… எஸ்றா 3:3

இலங்கை தேசத்தில், ஒரு மிஷனரி வெளிக்களப் பணி ஒன்று ஆரம்பிக்கப்பட்ட புதிதில், எந்த விதத்திலும் பணியைத் தொடருவதற்கோ, தேவனை ஆராதிப்பதிற்கான கட்டிடம் ஒன்றை அந்த இடத்தில் கட்டுவதற்கோ அனுமதிக்க முடியாது என்று உள்ளுரிலுள்ள பிரமுகர் ஒருவர் சவாலிட்டுச் சென்றாராம். சொன்ன மாதிரியே மாறி மாறி பலவிதமாக எதிர்ப்பைக் காட்டிக்கொண்டேயிருந்தார். இது ஊழியர்களுக்கு மிகுந்த இடையூறாக இருந்தது. மிஷன் தலைமை அலுவலகமும் பணித்தளத்தை மூடிவிடும்படி சொன்னார்கள். இன்று அதே இடத்தில் ஒரு ஆலயமும் கட்டப்பட்டு, தேவனை ஆராதிக்கிற ஒரு கூட்டமும் கூடிவருகின்றது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!

தேவனுடைய வேலையாக, தேவனே அழைத்து நம்மை அனுப்புவாரானால் அங்கே எழும்புகின்ற எதிர்ப்புகளுக்கு நாம் பயப்படலாமா? ஆலயத்தைக் கட்டுவதற்கு தேவனுடைய உந்துதலால் கோரேஸ் ராஜாவே அனுமதி கொடுத்திருக்க, எருசலேமுக்குச் சென்ற யூதர், வேலையைச் செய்ய ஆயத்தமாகும்போது அத்தேசத்து ஜனங்களுக்கு பயப்படலாமா? ஏன் பயந்தார்கள் என்பதற்கான விளக்கம் அந்த இடத்தில் கூறப்படாவிட்டாலும், இரண்டு முக்கிய காரியங்களை நாம் கவனிக்கவேண்டும். முதலாவது,வேலைசெய்ய ஆரம்பிப்பதற்குச் சற்றுக் காலதாமதம் ஏற்பட்டதே தவிர, வேலை நிறுத்தப்படவில்லை. அதாவது சற்று சிந்தித்து தாமதித்தே செயற்பட்டார்கள்.

இரண்டாவது, அவ் வசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி தேவனுக்கேற்ற விடயங்களில் தவறாது செயற்பட்டார்கள். அதிலே அவர்கள் தளர்ந்துபோகவில்லை.

தேவனுடைய தீர்க்கதரிசியான தானியேலுடைய வாழ்க்கை நமக்கு ஒரு சவாலாக அமையட்டும். பத்திரத்திற்குக் கையெழுத்து வைக்கப்பட்டது என்று அறிந்தபோதிலும், தான் முன் செய்துவந்தபடியே, மூன்றுவேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற் படியிட்டு ஜெபித்தார். கர்த்தரை ஆராதிக்கிற விஷயத்திலே எவருக்கும் பயமில்லாமல் செயற்பட்டார். கர்த்தருக்குப் பயப்படும் பயத்தை அவர் மனுஷருக்குப் பயப்படும் பயமாக மாற்றிப்போடவில்லை. இன்றைக்கும் ஆண்டவரைப் புதிதாக ஏற்றுக்கொண்டவர்கள் தமது குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் பயப்படவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்படுவதுண்டு. அவர்களது நிலைமையில் நியாயமும் இருக்கலாம். இப்படியான சூழ்நிலைகளில் நாம் ஞானமாகவே செயற்படவேண்டும். கர்த்தருக்கு மாத்திரம் பயந்து அவருடைய வழிநடத்துதலை அறிந்து செயற்படுவோமானால், எதிர்ப்புகள் வந்தாலும் நாம் பயப்படத் தேவையில்லை. கர்த்தர் பார்த்துக்கொள்வார். கிறிஸ்தவ வாழ்வு என்பது, கிறிஸ்துவோடு சேர்ந்து வாழும் வாழ்வு. இதை உணர்ந்து தேவனுடைய ஒத்தாசையோடு முன்செல்வோமாக.

? இன்றைய சிந்தனைக்கு:

கிறிஸ்தவன் என்று தைரியமாக வெளிப்படையாக வாழவும் செயற்படவும் எனக்குள்ள தடையென்ன? எப்படி அதை மேற்கொள்வது?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin