? சத்தியவசனம் – இலங்கை. ??
? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள் 17:8-16
? முன்னுரிமை
…முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா… 1இராஜாக்கள் 17:13
நாம் எவற்றுக்கு முதலிடம் கொடுக்கிறோம் என்பதை நமது செயல்கள் காட்டி விடுகின்றன. அமெரிக்காவின் தேசீய விளையாட்டான பேஸ்-பால் விளையாட்டின் பயிற்சியாளரை திருமணம் செய்து, அவருடன் 34 வருடம் வாழ்ந்த ஒரு பெண்மணிக்கு ஒரு சந்தேகம் வந்தது. தனது கணவர் தனக்கா அல்லது பேஸ் பால் விளையாட்டுக்கா, எதற்கு முன்னுரிமை கொடுக்கிறார்? இதனைச் சோதித்துப் பார்க்க விரும்பினாள். ஒரு குறிப்பிட்ட நாளில் அவள் தன் கணவரிடம், ‘அன்பரே, நான் மரணமடையும் நாளன்று உங்களுக்கு ஒரு விளையாட்டுப் போட்டி இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் என் மரண இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு, விளையாட்டுப் போட்டியை விட்டு விடுவீர்களா? அல்லது இறுதிச்சடங்கை விட்டுவிட்டு, விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளச் செல்வீர்களா? என்று கேட்டாள். கணவர் சற்று நேரம் யோசித்துவிட்டு, ‘உன் இறுதிச் சடங்கு நாளில் விளையாட்டுப்போட்டி வரும்படி நான் திட்டமிடுவேன் என்று ஏன் நினைக்கிறாய்?” என்று கேட்டார்.
சாறிபாத் ஊரில் ஒரு விதவையின் வீட்டில் வாழும்படி எலியா அனுப்பப்படுகிறான். அவன் அங்கே தங்கியிருப்பதற்கு முன்பாக, அவளுடைய முன்னுரிமையை சோதித்து பார்க்க விரும்பினான். அந்தச் சோதனை மிகவும் எளியது. அவளுக்கும், அவளது மகனுக்கும் அப்பம் சுட்டுச் சாப்பிடும் அளவுக்குத்தான் அவளிடம் மாவும் எண்ணெயும் இருந்தது. இந்த நெருக்கடி நேரத்திலும் எலியா, ‘ பயப்படாதே, நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா” என்றான். முதலில் எனக்கு ஒரு சிறிய அப்பம் சுடு. பின்னர் உங்களுக்குச் சுடலாம் என எலியா கூறியதற்கு பதிலாக, அவள் செயற்படுகின்ற விதத்தில் அவளது முன்னுரிமை தெரிந்துவிடும்; அவளுக்குத் தேவனிடம் உள்ள பற்றுதலும் தெரியவரும். அவள் அந்தச் சோதனையில் சிறப்பான வெற்றி பெற்றுவிட்டாள்.
எல்லோருக்கும் தேவையானது போதுமான அளவு இருக்கும்போது, சரியான காரியங்களைச் சரியாகச் செய்வது மிகவும் சுலபம். ஆனால், முன்னுரிமையை அறியும் சரியான சோதனை அதுவல்ல. நாம் ஒரு தியாக பூர்வமான காரியத்தைத் தெரிந்தெடுத்து செய்வதில்தான் நமது முன்னுரிமை தெரிகிறது. நம்முடைய தேவைகளின் மத்தியில் நாம் தேவனை நம்புகிறோமா என்பது, நாம் செய்யும் செயலின்மூலம் வெளிப்படும். உங்கள் முன்னுரிமைகள் நேராய் சரியாய் இருக்கும்போது, தேவன் மீதியானவைகளைக் கவனித்துக்கொள்வார்.
? இன்றைய சிந்தனைக்கு:
நமது செயல்கள் முன்னுரிமையை அடிப்படையாகக் கொண்டவை. முன்னுரிமைகள் தேவன்மேல் நமக்குள்ள விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டவை.
? இன்றைய விண்ணப்பம்
போதகர்களுக்காக ஜெபியுங்கள். அவர்கள் தமது மந்தையை எவ்வாறு கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதில் பல்வேறு வழிவகைகளை சரிசெய்துகொள்ளும்படிக்கும், விசுவாசிகளின் ஒன்றுகூட உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக முகங்கொடுக்கின்ற பல்வேறு சவால்களின் மத்தியில் அவர்களுக்காக ஜெபியுங்கள். தம்முடைய பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்ட விசுவாசிகளின் நலனுக்காக அவர்கள் தொடர்ந்து செயற்படவும், தமது வாழ்விலும் ஊழியத்திலும், அனைத்து பகுதியிலும் கர்த்தருடைய வழிகாட்டுதலையும் பராமரிப்பையும் தொடர்ந்து தேட வேண்டுமென அவர்களுக்காக மன்றாடுங்கள்.
⏩ இன்றைய தியானத்தை எழுதியவர் – டாக்டர் வுட்ரோ குரோல்
? அனுதினமும் தேவனுடன்.
?♂️ எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: www.Sathiyavasanam.lk | Backtothebible.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532