? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  எரேமியா 20:7-18

?  மனிதன் யாரென்று…

ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது. எரேமியா 20:9

தேவன் தமது வார்த்தையை அறிவிக்க எரேமியாவைத் தெரிந்தெடுத்திருந்தார். அதனால் எரேமியாவின் பாடுகள் சொல்லிமுடியாதவை. எரேமியா வெளிச்சத்தில் நடந்தான். அதனால்தானோ, இருளின் கிரியைகள் அவரைத் துரத்தித் துரத்தித் தொந்தரவு செய்தது. தனிமையிலும் துன்பத்திலும் தன் வாழ்வைக் கழித்த எரேமியா, துயரத்தின் மகனைப்போலானார். அதற்காக அவர் தன் வாயை மூடிவிடவில்லை.

இன்றைய தியானப்பகுதி எரேமியாவின் பாரம் நிறைந்த இருதயத்தின் கண்ணாடிபோல தெரிகிறது. தன் இருதயத்தின் சுமையை தேவனிடத்தில் அவர் இறக்கிவைக்குமாப் போல் இந்த ஜெபம் காணப்படுகிறது. தேவன் தமது வார்த்தைகளை எரேமியாவின் இருதயத்தில் போடப்போட, அதை அவர் ஒளிவுமறைவின்றி கூட்டாமல் குறைக்காமல், மறைக்காமல், மாற்றாமல் ராஜாக்களுக்கும் மக்களுக்கும் எடுத்துரைத்தார். அவற்றில், கீழ்ப்படியாவிட்டால் நிகழக்கூடிய அழிவின் செய்தியும், அதேசமயம் அதிலிருந்து தப்பித்துக்கொள்ளக்கூடிய வழிமுறையும் இருந்தது. இந்த வார்த்தைகளைச் சொல்வதினால் எரேமியாவுக்குக் கிடைத்த பலன், தொல்லைகளும், உயிராபத்துமே. அப்போதெல்லாம், இனிக் கர்த்தருடைய நாமத்தினாலே பேசவே மாட்டேன் என்று அடம்பிடிப்பார் எரேமியா. ஆனாலும், அந்த வார்த்தைகளை வெளியே சொல்லாமல் தனக்குள் அடக்கிவைக்க வைக்க, அது அவருக்குள் மூண்டெழுந்து, இன்னும் இன்னும் அடக்கிக்கொள்ளக்கூடாமல், அவருடைய எலும்புகளுக்குள் அக்கினியாய் பற்றி எரிந்தது என்கிறார்.

தேவபிள்ளையே, இருளின் கிரியையாகிய பாவத்திற்கு அடிமைகளாயிருந்த நம்மை தேவன் ஆச்சரியமான ஒளியினிடத்திற்குக் கொண்டுவந்தது, சுயநலவாதிகளாக நாம் மாத்திரம் தேவராஜ்யத்தினுள் பிரவேசிப்பதற்காக அல்ல. இருளுக்குள் இருக்கும் பிள்ளைகளையும் மெய்யான ஒளிக்கு நேராக வழிநடத்தவேண்டிய பெரிய பொறுப்பை தேவன் நமது கைகளில்தான் தந்திருக்கிறார். அப் பொறுப்பைத் தந்தவர் நம்மை வெறுமனே விடவில்லை. தமது செய்தியை நமது ஜெபவேளையிலும் தியான வேளையிலும் தந்துகொண்டே இருக்கிறார். அவை உண்மையாகவே மன்னிப்பு அடங்கிய அன்பின் செய்தி. வரப்போகிற அழிவைக் குறித்த பாரமுள்ள செய்தி. அதை நாம் மறைத்துவைத்து, ஜனங்கள் கெட்டுப்போனால் தேவன் நம்மிடம் கணக்குக் கேட்பாரே.  சொல்லுவதனால் நமக்குத் தீங்கு வருமே என்ற எண்ணத்திலும்பார்க்க, தேவ வார்த்தையை அடக்கி வைப்பதினால் உண்டாகும் அக்கினி மிகவும் சூடுள்ளது. தேவனுடைய செய்தியை நாம் அடக்கி வைக்காமல் எடுத்துரைப்போமாக.

? இன்றைய சிந்தனைக்கு:

இப்படிப்பட்ட அனுபவம் நமக்கு ஏற்பட்டிருக்கிறதா? நமது ஜெப தியான நேரங்களில் கர்த்தர் நமக்கு உணர்த்திய சத்தியங்களை நாம் அடக்கிவைத்து, அதனால் அவதிப்பட்டிருக்கிறோமா?

? இன்றைய விண்ணப்பம்

எமது நிதி மற்றும் நிர்வாக ஊழியர்களுக்காக ஜெபியுங்கள். அத்தியாவசிய பின்புல சேவைகளை வழங்கும் அவர்களுக்கூடாக நாம் எமது பணியினை தொடர்ந்திட வேண்டுமென மன்றாடுங்கள்.

⏩ இன்றைய தியானத்தை எழுதியவர் – இ. வஷ்னீ ஏனர்ஸ்ட். | 0094 771869710

? அனுதினமும் தேவனுடன்.

(இன்றைய தியானத்தை நீங்கள் http://sathiyavasanam.lk/dailyreading/ இணையத்தளத்தில் அல்லது https://www.facebook.com/sathiyavasanam/ முகப்புத்தகத்தில் வாசிக்கலாம். நன்றி.)

?‍♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: www.Sathiyavasanam.lk | Backtothebible.lk
Call: 011-4691500 | 011- 4691532

Solverwp- WordPress Theme and Plugin