[? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு :1கொரி 13:4-8

அழியாத உன்னத அன்பு

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புடனே அன்புகூருகிற யாவரோடும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென். எபேசியர் 6:24

“அன்பு” இந்தச் சொல் நமக்கு மிகவும் பரிச்சயமாகிவிட்டது. இதைக்குறித்து அநேக செய்திகளைக் கேட்டிருக்கிறோம், வாசித்திருக்கிறோம். திருமண ஆராதனைகளில் மேலுள்ள  வேதப்பகுதியையே அதிகமாக வாசித்து, ஆலோசனை கூறுவதுமுண்டு. கர்த்தருடைய கட்டளையில் அன்பைக்குறித்துக் கூறப்பட்டிருக்கின்ற வாக்கியங்கள் நமக்கு மனப்பாடம். அகாபே அன்பு, நட்புக்குரிய அன்பு, உறவுகளுக்கிடையான அன்பு என்று பலவிதங்களில் அன்பைக்குறித்து அறிந்திருக்கிறோம். ஆனால், நமது வாழ்வில் எந்தவிதத்தில், எந்த அளவில் அன்பு காணப்படுகிறது என்பதை சற்று சிந்திப்போம்.

அன்பு, இதை நாம் நமக்குள் உருவாக்கமுடியாது; இது பரிசுத்த ஆவியானவரின் கனியில் பிரித்துப்பார்க்கமுடியாத ஒன்பதுகளில் முதலாவதான தெய்வீகப் பண்பு. ஆக, பரிசுத்த ஆவியானவரால் நமக்குள் ஊற்றப்படுகின்ற இந்த அன்பின் தன்மை நிச்சயம் அவருடைய தன்மையேதவிர மனித தன்மை அல்ல. அன்பைக்குறித்த மேன்மையான தன்மைகளை பவுல், கொரிந்து சபைக்கு அழகாக எழுதியுள்ளார். இந்த தன்மைகளுக்கெல்லாம் மூல காரணர் ஆண்டவர் இயேசுவே! அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே தாழ்த்தி மனுஷர் சாயலாகி, நம்மைத் தேடிவரச் செய்தது இந்த அழியாத அன்பு தான்! இது அள்ள அள்ளக் குறையாதது. இது பொறாமையும் கொள்ளாது, தன்னைப் புகழாது, இறுமாப்பாயுமிராது. தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, சகலத்தையும் தாங்கும், சகிக்கும். இந்த மேன்மையான அன்பை கிறிஸ்துவில் மாத்திரமே காணமுடியும் என்றால், அவரைப் பிரதிபலிக்கிற நம்மிலும் இது காணப்படுமா?

அன்பு சூழ்நிலைகளைச் சார்ந்திருப்பதில்லை. சிலுவையில் தொங்கியபடி தம்மை அறைந்தவர்களை மன்னிக்கும்படி பிதாவிடம் வேண்டி நின்ற அன்பு இது. தம்மை மறுதலித்த பேதுரு மற்ற சீஷர்களையும் கூட்டிக்கொண்டு மீண்டும் மீன்பிடிக்கச் சென்ற போதும், கரையில் நின்று, “பிள்ளைகளே” என்று அழைத்து, தம்மோடு சேர்த்துக்கொண்ட அன்பு இது. மனித குலத்தை இரட்சிக்கும்படி தம்மையே பலியாகக்கொடுத்த அன்பு இது. நிகரற்ற இந்த அன்பின் சொரூபியான ஆண்டவரிடத்தில் அழியாத அன்புடனே அன்புகூருகிற யாவருக்கும் கிருபை பெருகும் என்கிறார் பவுல். அதாவது, கிறிஸ்து நம்மில் கொண்டுள்ள அன்பை நாமும் பிறரிடத்தில் பிரதிபலிக்கும்போது, அதுவே நாம் கிறிஸ்துவினிடத்தில் காட்டும் அன்பு ஆகும். கிறிஸ்து நம்மை மன்னித்ததுபோல நாமும் பிறர் தவறுகளை மன்னிக்கிறோமா? பிறர் தேவைகளைச் சந்திக்க நாம் ஆயத்தமா? தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும். (1யோவா 4:12)

? இன்றைய சிந்தனைக்கு:

    என்னை ஆராய்ந்து கிறிஸ்துவின் அழியாத அன்பு என்னிலும் வெளிப்பட என்னைத் தருவேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin